• June 7, 2025

தெற்கு திட்டங்குளம் தினசரி சந்தைக்கு தற்காலிக அனுமதி கிடையாது; கோட்டாட்சியர் கைவிரிப்பு

 தெற்கு திட்டங்குளம் தினசரி சந்தைக்கு தற்காலிக அனுமதி கிடையாது; கோட்டாட்சியர் கைவிரிப்பு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமாக தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் உள்ள இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரிகள் கடைகள் தொடங்கினார்கள்.
இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி சந்தை செயல்பட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25 முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் வேறு எங்கும் கடை அமைக்க மாட்டோம். உரிய அனுமதி பெற்றவுடன் கடைகள் திறப்போம் என்று அறிவித்து உள்ளனர்,.

இந்த் நிலையில்  தனியார் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் சமாதானக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தனியார் சந்தை நிர்வாகிகள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. சிறப்பு அனுமதி கொடுத்து தங்களது சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி  பேசுகையில் கூறியதாவது:-

 உரிய அனுமதி பெற்றால் மட்டும் தான் , தனியார் தினசரி சந்தைக்கு அனுமதி தர முடியும், தற்காலிகமாக அனுமதி தர முடியாது. மேலும் அனுமதி பெற தேவையான துறைகளில் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும், அதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பம் செய்து உரிய அனுமதி பெற வேண்டும்

ஏற்கனவே மார்க்கெட் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சில  உத்தரவுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது. முறையாக  உரிய அனுமதி பெறும் வரை கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில்  செயல்படும் தினசரி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்..

கூட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ்குமார் , கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா,  நகராட்சி பொறியாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்  வனசுந்தர், உதவி ஆய்வாளர்கள் சிலுவை அந்தோணி,  அரிக் கண்ணன்  மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *