கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் புதிய மார்க்கெட்செயல்பட தொடங்கியது

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக செய்லபட்டு வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டில் .மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் வந்தன, மொத்தம் 396 கடைகளில் 360 கடைகள் இயங்கி வந்தன.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இந்த தினசரி மார்க்கெட்டில் கடைகளை இடித்து விட்டு 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மார்க்கெட்டில் கடைகளை இடிக்காமல் வேறு இடத்தில் புதிய சந்தை கட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக இருந்தது.
மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவது என்று முடிவு செய்து இறுதியாக கடந்த 14ந்தேதி வரை கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்தது.
இருப்பினும் கடைகள் காலி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 17-ந்தேதி முதல் மார்க்கெட் கடைகள் இயங்காது” என்று நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு போர்டு வைத்தது. மேலும் நேற்று காலை 5.30 மணி அளவில் கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. 3 ஜே.சி.பி.இயந்திரங்கள் கொண்டு கடைகளை இடிக்கும் பணி நடந்தது.
இதை அறிந்து இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டம் நடத்திய வியாபாரிகள் வியாபாரிகள் ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எஸ்.ஆர்.பாஸ்கரன், செல்லத்துரை உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்,
இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் சுசீலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது. கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு விட்டன.
இந்த மார்க்கெட்டின் மொத்த பரப்பளவு 4.1/2 ஏக்கர் ஆகும். கடைகள் இடிக்கப்பட்டதால் மார்க்கெட் ஒரு மைதானம் போல் வெறிச்சோடி காணப்படுகிறது. காய்கறி கடைக்காரர்கள் அனைவரும் தங்களது கடைகளை காலி செய்து விட்டனர்.


இதற்கு மாற்றாக எட்டயபுரம் ரோட்டில் தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் 120 மொத்த கடைகளும், 120 சில்லறை கடைகளும் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது,’ இதில் முதல் கட்டமாக 5 ஏக்கரில் 40 மொத்த கடைகளும் 40 சில்லறை கடைகளும் அமைத்து இன்று வியாபாரம் செய்ய தொடங்கினார்கள். மேற்கூரை அமைக்காத கடைக்காரர்கள் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் இன்று வியாபாரம் செய்தனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். விரைவில் மீதமுள்ள 5 ஏக்கரில் கடைகள் அமைக்கப்படும். அத்துடன் கழிவறை வசதியும் செய்து தரப்படும் என்று வியாபாரிகள் சங்க தலைவர் அழகுராஜன், செயலாளரர் அரவிந்தசாமி, பொருளாளர் சின்ன மாடசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
இடிக்கப்பட்ட மார்க்கெட்டில் இருந்த மளிகை கடைக்காரர்கள் புதிய மார்க்கெட்டுக்கு இடம் மாறவில்லை. பழைய மார்க்கெட்டுக்கு அருகிலேயே புதிய கடைகளை பார்த்து அங்கு மாற்றிக்கொண்டனர்.
தெற்கு திட்டங்குளம் புதிய மார்க்கெட்டில் இன்று வியாபாரத்தை தொடங்கியவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாஸ்கரன் கூறுகையில்,” புதிதாக கட்டப்படும் மார்க்கெட் கடைகள் எங்களுக்கு மீண்டும் கிடைக்காது. பணம் உள்ளவர்கள் மட்டுமே பெறமுடியும். நாங்கள் நகராட்சி நிர்வாகத்தில் ஒரு வருட கடை வாடகையை முன்பணமாக கொடுத்து இருக்கிறோம். நகராட்சி நிர்வாகம் அந்த பணத்தை விரைவாக எங்களுக்கு திருப்பி தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
,.
