நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ; செயற்குழுவில் தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் உள்ளடக்கிய 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு :-
*அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு செயற்குழு ஒப்புதல் அளித்தது. அதிமுகவின் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
.
*எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 3-வது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும்.
*2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும். *நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமைத்து வெற்றிபெற உழைக்க வேண்டும்.
*நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்தல்
*திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் IT Wing நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மீது, விடியா அரசால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்குக் கடும் கண்டனம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- திமுக-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கழகத்திற்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு, கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் ஒன்றிணைந்து, தக்க பாடம் புகட்டிட, வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
