கோவில்பட்டி அருகே பொன்னேர் திருவிழா; டிராக்டர்களுக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஊரில் உள்ள விவசாய சங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அத்துடன் அனைத்து பூஜை பொருட்களுடன் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, அப்பாசாமி நாயக்கர் நிலத்தில் விவசாயிகள் டிராக்டடகளை நிறுத்தி, குமார் ஆசாரி(தச்சர் ), ஆறுமுகம் ஆசாரி(கொல்லர் ) ஆகியோர் பூமி மாதாவுக்கு பூஜை நடத்தினார்கள்.

அங்கு சிறு அளவில் பசு சாணம் கொண்டு, பிள்ளையார் உருவாக்கி பூஜை செய்து கடவுளுக்கு பச்சரிசி, வெல்லம், கம்பு அரிசி அதனுடன் நவ தானியங்கள் வைக்கப்பட்டது. பூஜை முடித்தவுடன், நவ தானியங்கள் விதைக்கப்பட்டது. காட்டில் உள்ள களை செடிகள் அகற்றப்பட்டது. முடிவில் அனைத்து விவசாயிகளும் நல்ல மழை வேண்டியும், நல்ல மகசூல், பால் வளம் வேண்டியும் உழவு செய்தார்கள்.
முடிவில் பச்சரிசி, வெல்லம், பாக்கு, வெற்றிலை, கம்பு அரிசி நனைய விட்டு தயார் செய்ததை பிரசாதமாக வழங்கப்பட்டது. அத்துடன் பானக்கரம், நீர் மோர் உழவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஊருக்குள் வரும் உழவர்கள் மீது முறை பெண்கள் தங்கள் முறை மாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, ஒன்றிய செயலாளர் பரம்பக்கோட்டை வேல்முருகன் , ஒன்றிய தலைவர் சவுந்திரராஜன் , சுந்தர்ராஜ், கந்தசாமி நாயக்கர், பொன் சீனிவாசன் ,பெருமாள்சாமி, சீனிவாசன்,கனகராஜ்,ஆழ்வார்சாமி நாயக்கர் , தேசிய விவசாயிகள் சங்க கிளை தலைவர் தனபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன.
