காதல் திருமணத்தால் ஆணவக்கொலை: 2 பேர் பலி- புதுப்பெண் கவலைக்கிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்
இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்தார்.. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்தார்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ், காதலித்த பெண் அனுஷாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நேற்று சுபாஷ், தனது மனைவியுடன் சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு வந்தார்.. அங்கு அவர் தனது பாட்டி கண்ணம்மா (தந்தை தண்டபாணியின் தாய்) வீட்டுக்கு சென்றார்.
இதனை அறிந்து அங்கு சென்ற தண்டபாணி, அரிவாளைக் கொண்டு தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த தாக்குதலில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் தண்டபாணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
