எட்டயபுரம் நகை கடையில் ரூ.5 லட்சம் வெள்ளி பொருட்கள் கொள்ளை

கோவில்பட்டி அருகே , எட்டயபுரத்தை சேர்ந்தவர் அய்யனார்(38). இவர் எட்டயபுரம் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலையில் அவரது கடை உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்து அய்யனார் விரைந்து வந்தார்.கடைக்குள் சென்று பார்த்தபோது திருட்டு நடந்து இருப்பதை உறுதி செய்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடைக்குள் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த வெள்ளி கொலுசுகள், வெள்ளிக் கொடி தண்டைகள் மற்றும் பழைய வெள்ளி பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 7 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. மேலும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியில் கைப்பிடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. அதனை மர்ம நபர்களால் திறக்க முடியாததால் தங்க நகைகள் தப்பின என்பது தெரியவந்தது.
கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்குள் இருந்த கேமராக்கள் திசை மாற்றி திருப்பப்பட்டிருந்தன. கேமரா பதிவுகளை சேமிக்கும் டி.வி.ஆர். மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த கடை முன்பு பொதுமக்கள் கூடிவிட்டனர், அவர்களை பொலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
