பாபநாசம் அணையின் நீர்மட்டம் சரிவு; குடிநீர் பற்றாக்குறை அபாயம்

. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. ஆகும். பாபநாசம் அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீர்ல் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையில் பருவமழை காலங்களில் தண்ணீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கும். இந்த அணை நிரம்பி வழிந்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார், பிசான சாகுபடி நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்படும்.
இதுபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணையிலிருந்து தாமிரபரணியில் திறந்துவிடப்படும் தண்ணீர் இருந்து வருகிறது. தற்போது பாபநாசம் அணை இந்த கோடையில் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 70 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 18.55 அடியாக உள்ளது.
நீர்மட்டம் வெகுவாக குறைந் துள்ளதால், அணையின் உட்புறம் சிறிய குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகள் சேறும் சகதியுமாக மாறிக்கொண்டிருக்கிறது. உள்ளேயிருக்கும் மரங்கள் வெளியே தலைகாட்டுகின்றன. பாபநாசம் அணை வறண்டுவருவது நடப்பு கோடை பருவத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
