ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாடு: ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப்போகிறது-டி.ஜெயக்குமார்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமையால் கட்சியை வளர்க்க முடியும் என்ற நிலை எடுக்கப்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து இன்னும் சீரான நிலையை எட்டவில்லை;. எடப்பாடி பழனிசாமி -ஒ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறார்கள். எங்கள் பக்கம் தான் தொண்டர்களின் ஆதரவு உள்ளது.. என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் திருச்சியில் வருகிற 14ம் தேதி மாபெரும் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அழைக்கப்படுவார்கள் என்று பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார்.
இந்த மாநாட்டில் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அ.தி.மு.க. கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கட்சி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இந்த மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் ஒ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவதன் மூலம் அவரது ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரபோகிறது .அதாவது ரூ.200 கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ளதால் அவர் சேர்த்து வைத்திருந்த கருப்பு பணம் அனைத்தும் வெளியே வர உள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தினால் அவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.
