கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 29 மாதமாக ஊதியம் பெறாத தலைமை ஆசிரியர், ஆசிரியை

கோவில்பட்டி அருகேயுள்ள நாச்சியார்புரத்தில் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கோசலை, இடைநிலை ஆசிரியராக பானுமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.
அந்த பள்ளியில் நிர்வாக செயலாளர் பிரச்சினை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 29 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஊதியம் வழங்க ஏதுவாக நேரடி மானியம் வழங்க வேண்டி கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பலமுறை இது குறித்து கேட்டும், எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை. ,மேலும் சரியான பதிலும் இல்லை என்பதால் நேற்று மாலையில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொருளாளர் சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி, வட்டாரத் தலைவர் செந்தில்குமரன், வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார், வட்டார பொருளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
