“இலவச கட்டாய கல்வி திட்டம் கிடையாது”: கோவில்பட்டி பிருந்தாவன் பள்ளி நிர்வாகம் மீது ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோவில்பட்டியில் “உள்ள பிருந்தாவன் பள்ளி நிர்வாகம் “இலவச கட்டாயக் கல்வி திட்டம் கிடையாது”: என்று மறுப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை பெற்றோர்கள் நேற்று சந்தித்து அளித்துள்ள மனுவில், கூறி இருபதாவது:-
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பிருந்தாவன் கிட்ஸ் பிரைமரி & நர்சரி பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் புதிய கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட உள்ள காரணத்தினால் இனிவரும் 2023-2024 கல்வியாண்டில் இருந்து இலவச கட்டாயக் கல்வி திட்டம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும், குழந்தைகளுக்கு முழு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோருகிறார்கள். நாங்கள் அன்றாட கூலி வேலை செய்து வறுமையான குடும்ப சூழ்நிலையில் இருப்பதால், 100-க்கும் மேற்பட்ட ஏழ்மையான குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். ஆகையால், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தொடர்ந்து மாணவர்கள் கல்வி பயில மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆட்சியரை சந்தித்துவிட்டு வந்த பெற்றோர்கள் கூறுகையில் எங்கள் கோரிக்கைகளை கூறி இருக்கிறோம். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தனர்.
