கோவில்பட்டியில் கட்டில் போட்டு உறங்கும் போராட்டம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அறிவிப்பால் பரபரப்பு

கோவில்பட்டியில் நீதிமன்றங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், தாலூகா அலுவலகம், கிளைசிறைச்சாலை, கோவில்பட்டி உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம், கருவூலம், பி.எஸ்.என்.எல் என மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், விரைந்து அந்த சாலைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும், மேலும் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்கள் கட்டி தர வேண்டும், அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை முற்றிலும் அகற்றி விட வேண்டும் என்பன போன்ற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல முறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டில்கள் போட்டு படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதற்காக அக்கட்சியினர் நார் கட்டில்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கட்டில்களை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து த.மா.கவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியது மட்டுமின்றி கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனுவி அளித்தனர்.
சாலை சீரமைப்பு தொடர்பாக கள ஆய்வு செய்யப்பட்டு, சாலையை சீரமைக்க பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர துணைத் தலைவர்கள் வின்சென்ட், சுப்புராஜ், நகரச் செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், சரவணன், வட்டாரத் துணைத் தலைவர் செந்தூர்பாண்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்
