• June 7, 2025

அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 கோடியை எட்டும்; டி.ஜெயக்குமார் கணிப்பு

 அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 கோடியை எட்டும்; டி.ஜெயக்குமார் கணிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி புதிய உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் விண்ணப்ப படிவங்களை பெற்றுகொண்டார்.

பின்னர் அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இன்று இருபெரும் நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சியாக சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தில்   கிளைக் கழகம் தொடங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கழகப் பொதுச் செயலாளர் எதிர்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் , மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கும் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

மற்றொரு நிகழ்ச்சியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பாக அம்மாவின் பிறந்தநாளையொட்டி 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில்  நடைபெற்றது. மேலும் குழந்தைகளக்கு தொட்டில் உட்பட  10 ஆயிரம் மதிப்பு கொண்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. இவற்றை எடப்பாடியார் வழங்கினார்.

கேள்வி: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி மாநாடு நடத்துகிறார்கள். இந்த மாநாடு பற்றி?

பதில்: சமூக நீதி பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு தகுதி என்பதை காட்டிலும் எதாவது ஒரு முகாந்திரம் வேண்டும். உண்மையிலே சமூக நீதி பற்றி பேசக்கூடிய தகுதி வாய்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் அம்மா  “சமூக நீதிதான்” தமிழகத்திற்கு உகந்தது என்று ஒவ்வொரு திட்டமும் கொண்டுவந்தார்கள். அதாவது தாலிக்கு தங்கம், லேப் டாப், பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டி திட்டம், அம்மா உணவகம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்கள். ஆனால் இத்தகைய சமூக நீதி காக்கின்ற அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு இன்றைக்கு சமூக நீதி மாநாடு நடத்தினால் உலகமே மு.க.ஸ்டாலினை கேலியாகத்தான் பார்க்கும். கேலி சித்திரமாகத்தான் அவர் காட்சியளிப்பார்.

கேள்வி:  உறுப்பினர் படிவம் கொடுக்கப்படும் இந்த வேளையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை  எதாவது குறைந்துள்ளதா?

பதில்: எந்தவிதத்திலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு கோடியே 46 லட்சம்  பேர் அப்படியே இருக்கிறார்கள். இன்றைக்கு உறுப்பினர் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கூடுவார்களே தவிர குறைய மாட்டார்கள். ஓ.பி.எஸ். அணியில் இருக்கின்ற 500 பேர்களை கணக்கில் கொள்ள வேண்டாம்.

கேள்வி:  உறுப்பினர் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுமா?

பதில்: எப்படியும் 2 கோடி பேர் வருவார்கள்.

கேள்வி: சென்னை மேயரை மாற்றச் சொல்லி பிரச்சினைகள் எழுகிறதே? இது பற்றி?

பதில்: கட்சியும் ஆட்சியும் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சொந்தக்கட்சிக்காரர்களே மேயரை மாற்றச் சொல்வதும், சொந்தக் கட்சிக்காரர்களே வெளிநடப்பு செய்வதும் மற்றும் உள்ளிருப்பு போராட்டம்   நடத்துவதும் நடக்கிறது. இதெல்லாம் தி.மு.க. கட்சியில் சர்வ சாதரணமாக அரங்கேறி வருகிறது. தி.மு.க. தற்போது தறிக்கெட்ட குதிரையாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கேள்வி: பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி மாநிலத் தலைவர்கள் கூறுவது பற்றி?

பதில்: ஏற்கெனவே அமித்ஷா கூட்டணி பற்றி தெரிவித்துவிட்டார். நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியாரும் தெரிவித்துவிட்டார்கள். பா.ஜ.க.வின் மத்தியில் உள்ள தலைவர்கள் கூட்டணி பற்றியும் தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *