கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தேரோட்டம்

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், விளா, காலசந்தி ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும், வைரத் தேரில் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினர். பின்னர் 7.45 மணிக்கு மேல் சட்ட ரதமும், அதனை தொடர்ந்து கோ ரதமும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.

தேரோட்டம் தொடங்கி. 100 மீட்டர் தொலைவு சென்ற நிலையில், ஒரு சமுதாயத்தினர் சாதி குறியீடுடன் கூடிய பனியன், துண்டு ஆகியவற்றை அணிந்து வந்தனர். இதற்கு மற்ற சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, தேர் இழுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர்களுடன் கோயில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் யாரும் சாதி குறியீடுடன் கூடிய பனியன்கள், ரிப்பன், கொடி மற்றும் துண்டு ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது என கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதனால் காலை 8.10 மணி முதல் 10 மணி வரை சட்ட ரதமும், கோ ரதமும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. இந்த தேர்கள் காலை 10.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
அதன் பின்னர் காலை 11 மணிக்கு வைரத் தேரோட்டம் தொடங்கியது. பேரூராட்சி மன்றத் தலைவர் அருணா சுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, கழுகுமலை செம்ம நாட்டார் தேவர் சமுதாய தலைவர் வன்னியன், தொழிலதிபர் கந்தசாமி, மகேஸ்வரன், ஸ்ரீராகவேந்திரா சேவை அறக்கட்டளை ஜெயக்கொடி, பிரதோஷ குழு முருகன் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
