தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் , செந்தில்ராஜ், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 48 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்
