கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தைக்கான கடைகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் அமைய இருக்கும் தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது.
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சுசீலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

சில வியாபாரிகள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கத்தினர் குலுக்கலில் கலந்து கொண்டனர். ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை, அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பின்னர் குலுக்கல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு மற்றும் அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் படி தான் குலுக்கல் நடைபெறுகிறது. தற்காலிகமாக அமைய உள்ள தினசரி சந்தையில் வியாபாரிகள் கேட்கும் அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தர தயாராக இருப்பதாகவும், அதற்கான பணிகளும் தொடங்க இருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
