ஏப்ரல் 9 ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர் அன்றிலிருந்து 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
அதற்கு முன்பு வரும் 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் ஆஸ்வெனஸ்டே முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.
தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அப்போது மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள தவக்காலம் உதவியாக இருக்கும்.
இந்த ஆண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதனாக கடைப்பிடிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.
புனித லூர்து அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஆன்டனி புரூனோ நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம், திரு இருதயப் பேராலயம், புனித அந்தோனியார் திருத்தலம், யுதா ததேயு திருத்தலம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள். சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 6-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது.