கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் கடந்த 1998-99-ம் ஆண்டில் 502 பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மீண்டும் 502 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அம்பேத்கர்-பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க நிறுவன தலைவர் ஆ.செண்பகராஜ் தலைமை தாங்கினார். இதில், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் அ.மாணிக்கராஜ், ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் செ.காளிமுத்து, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சூ.பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) நகர செயலாளர் சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலம் தொடர்பாக மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவுகள் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கோட்டாட்சியர் தெரிவித்தார். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்
