கோவில்பட்டியில் பா.ஜனதா போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு தொடர்பாக கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒரு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், தற்போது செயல்படும் சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது. நகராட்சி எல்லைக்கு கூடுதலாக ஒரு சந்தை உருவாக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், 11-ம் தேதி பா.ஜ.க.வினர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டாட்சியர் இல்லாததால், திங்கட்கிழமை (இன்று ) காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்படி, இன்று காலை கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் எம்.பி.காளிதாசன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள், தற்போதுள்ள தினசரி சந்தையில் உள்ள கடைகளை இடிக்கக்கூடாது என்பது தான் கோவில்பட்டி நகரத்தை சேர்ந்த 80 சதவீத மக்களின் கருத்தாகும். எங்களது பிரதான கோரிக்கை நகரில் கூடுதலாக ஒரு தினசரி சந்தை உருவாக்க வேண்டும் என்பது தான். இதனை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் நியாயமான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், போலீஸார் எங்களது போராட்டங்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுத்து வருகின்றனர், என்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
அப்போது, போலீசார் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் கோவில்பட்டியில் கூடுதலாக தினசரி சந்தை அமைக்க வலியுறுத்தி நாளை (14-ந்தேதி)) மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று , பா.ஜ.க.வினர் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.
