திருத்தணி முருகன் கோயிலுக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம்; பக்தர்கள் தரிசனம் ஒரு மணி நேரம் ரத்து

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
தற்போது இந்த கோயிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் உணவு பொருட்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்தநாள் என்பதால் காலையிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வர தொடங்கினர். காலை 7:30 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோயில் வளாகத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரென மூலவர் சன்னிதானத்தில் புகுந்து விட்டன.
. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கோயில் ஊழியர்கள் குரங்குகளை துரத்த முயன்றபோது கடும் கோபத்துடன் சீறி பாய்ந்து அட்டகாசம் செய்தது. உடனடியாக கோவில் ஊழியர்கள் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து மூலவர் சன்னதியில் அமர்ந்திருந்த குரங்குகளை கோயிலுக்கு வெளியே விரட்டினர். குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்
