உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் “புதுமைப்பெண்” இரண்டாம் கட்ட திட்டம்

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண்” என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப்பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (8.2.2023) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஆகியோர் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி துறை சார்ந்த அலுவலர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
