ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகத்தை மட்டுமே நம்பி ஆளுங்கட்சி அத்துமீறல் ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்தார், அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வினர் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது. கூறியதாவது;-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தினந்தோறும் ஆளும் இந்த விடியா அரசு,அரசு இயந்திரத்தை முழுமையாக மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தி அதன் மூலம் ஒரு குறுக்கு வழியிலே வெற்றிபெறுகின்ற முயற்சியிலே ஈடுப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தைக் குறுக்குவழியிலே முடுக்கிவிட்டாலும்,பணத்தை வாரி,வாரி இரைத்தாலும், ஆளும் விடியா அரசின் அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இருக்கின்ற திமுகவினரை எல்லாம் அங்கே குவித்தாலும்கூட ஒரு மகத்தான வெற்றியைக் கழகம் பெறும். ஒன்று அல்லது மூன்று பூத் என்று அமைச்சர்கள் பிரித்துக்கொண்டு பணிசெய்யும்போது,அந்த பகுதியில் அவர்கள் வரும்போது ஆரத்தி எடுக்கின்ற நிகழ்வைச் சாக்காக வைத்து தட்டு,சொம்பு.தேங்காய் அதில் ஒரு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள்.தேர்தல் வந்தால்தான் மக்கள் இவர்களுக்குக் கண்ணுக்குத் தெரிவார்கள். தேர்தல் வரவில்லை என்றால் மக்கள் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். இடைத்தேர்தல் என்பதால் பணநாயகத்தை மட்டுமே நம்பி,ஜனநாயகத்தைக் குழியில் போட்டுப் புதைத்துவிட்டு, இன்றைக்கு திமுகவினர்,குறிப்பாக அமைச்சர்கள் அனைவரும் இதுபோன்ற அத்துமீறல்களை ஜனநாயகத்தை படுகொலை செய்கின்ற,நியமான தேர்தலை நடத்தாமல் பணத்தை நம்பியே தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.தேர்தல் சின்னங்களை அரசு அலுவலக சுவர்களில் எழுதக்கூடாது. இதுபோல சாலைகளில் அவர்கள் கட்சி சின்னத்தை வரைகிறார்கள்.இதுபோன்ற செயல்களை நாங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்.
அரசு இயந்திரம் இந்த நேரத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.இதனை நீங்கள் தடுக்கவேண்டும்.சுதந்திரமான,நியமான தேர்தலை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.தேர்தல் ஆணையாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான ஆதாரங்களை அளித்துள்ளீர்களா
பதில் : அனைத்து ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.இதனை எல்லாம் மனதில் வைத்து நடவடிக்கை எடுப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் அவர் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளாரே
பதில் : கசாப்பு கடைக்காரரை ஆடு நம்பினால் ஆடு என்னவாகும். ஆடுகள் என்ன கதியாகும்.அந்த கதிதான் ஆகியுள்ளது.
கேள்வி : இரட்டை இலை சின்னம் முடக்கக்கூடாது என்பதற்காகதான் வாபஸ் பெற்றதாகத் தெரிவித்துள்ளாரே
பதில் : குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்திக்க நீங்கள் ஏதாவது அழைப்பு விடுத்துள்ளீர்களா,அவர்கள் ஏதாவது கேட்டுள்ளார்களா
பதில் : எப்படிச் சந்திக்க முடியும்.இதற்கு வாய்ப்பு 100 சதவீதம் இல்லை. எடப்பாடியார் தாக்கல் செய்த மனு தொடர்பாக இரட்டை இலையைப் பெற்றுள்ளோம். அவரை பொறுத்தவரையில் (ஓ.பன்னீர்செல்வம்) திமுகவின் பி டீமாக இருந்துவிட்டு,இரட்டை இலையை எப்படியாவது முடக்கவேண்டும் என்று முயற்சி செய்து அது முடியாமல் போய்விட்டது. அதனால் இதுபோன்ற பிரச்சாரங்களைப் பரப்பிவிடுகிறார்.இது உண்மையில்லை. எங்களைப் பொறுத்தவரையில் இரட்டை இலை கிடைத்தது தொடர்பாகத் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.இதன் அடிப்படையில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும். நாங்கள் அனைவரும் கோயிலாக மதிக்கக்கூடிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையைக் காலால் எட்டி உதைத்து,ஆவணங்களைக் கொள்ளை அடித்து,ரவுடிகளை வைத்துக்கொண்டு செயல்படுவது,கருணாநிதிக்கு வாழ்த்துப்பா பாடிவிட்டு, இவர் மட்டுமில்லாமல் அவர் மகனும் வாழ்த்துப்பா பாடிவிட்டு இப்படி திமுகவைச் சார்ந்து இருக்கின்ற நிலை இருக்கின்றபோது அதனை எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கேள்வி : இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்களே
பதில் : இது முரண்பாடுதானே. தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.அவர்கள் தென்னரசு என்று சொல்வதற்கு வாய்வலிக்கிறதா. திராட்சையை எட்டி எட்டிப் பார்த்துக் கிடைக்காதபோது அந்த பழம் புளிக்கும்.அதுபோன்ற கதைதான் அவர்கள் கதை. ஊருக்கே தெரியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று.நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் கிடையாது.
கேள்வி : முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.இதற்கு கு.பா.கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளாரே
பதில் : முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கலாம்.நான் கட்சி ரீதியாகச் சொல்கிறேன்.
கேள்வி : நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதா
பதில் : அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது.நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம். கண்டிப்பாக ஜனநாயக அத்துமீறல்கள்,அநியாயங்கள் அதனை எல்லாம் முறியடித்துத் தாண்டி ஒரு மகத்தான வெற்றியை நாங்கள் நிச்சயமாகப் பெறுவோம்.
கேள்வி : தேர்தல் வேட்பாளருக்கு தற்போது அவைத்தலைவர் கையெப்பமிடும் இடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.இது வருங்காலங்களிலும் தொடருமா
பதில் : இது இடையீட்டு மனு.அது தொடர்பாகதான் தீர்ப்பு வந்துள்ளது.இது இடைத்தேர்தலுக்கு மட்டும்தான் பொருந்தும்.
கேள்வி : மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அவர்கள் தரப்பிலேயே சொல்கிறார்களே
பதில் : எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.அவர் செயல்பாடு திமுகவோடு சார்ந்து இருக்கும் நிலையில் இதுபோன்று நடக்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
