கோவில்பட்டியில் குடிநீர் பிரச்சினை :நகராட்சி பொறியாளரை காருடன் சிறைபிடித்து மக்கள் போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி 5வது வார்டு வேலாயுதபுரத்தில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி பொறியாளர் ரமேஷ், வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். 2வது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை, குறைவாக வருவதாகவும், எனவே முதல் குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லலராஜா மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொறியாளர் ரமேஷ் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும் கவுன்சிலரை பார்த்து நீ யார் ? என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கவுன்சிலர் லவராஜா தலைமையில் பொறியாளர் வாகனத்தினை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்;டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் சீராக வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
இதை தொடர்ந்து பொறியாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்
