தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று (22.1.2023) காலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் மாபெரும் “மினி மராத்தான்” போட்டி நடத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். 6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில் நமது உடல் ஆரோக்கியம் தான் நமது பாதி சொத்து, எனவே நீங்கள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் இளைஞர்கள் ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற உறுதி மொழி ஏற்று போதைக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும்.,
சிலர் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி தொடர்ந்து உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களது உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் இம்மானுவேல், ஜெயக்குமார் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
