• June 15, 2025

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்தன; பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

 கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்தன; பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த பணியை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இன்று(புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்.

தென் தமிழகத்தில் அதிவேக ரெயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து  மதுரை-தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு பகுதியாக முடியும்போது முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி – கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி – கடம்பூர் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து உள்ளது.

இந்த நிலையில் கோவில்பட்டி – கடம்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 22 கிலோ மீட்டர் தூர மின்மய இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கடம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு ரெயில் மூலம் ஆய்வு பணியை தொடங்கினார்.அப்போது ரெயில்வே கேட்டுகள், கடம்பூர் துணைமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) இந்த புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையில் கோவில்பட்டியில் இருந்து மோட்டார் டிராலி மூலம் பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இன்று ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வு மதியம் 1:30 மணிக்கு நிறைவடையும். பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் வரை புதிய இரட்டை பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது.

இதனால் இந்த ரெயில் பாதை அருகே வசிக்கும் மக்கள் தண்டவாளத்தை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரேயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *