மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்; ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் இன்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று ஒருநாள் மட்டுமின்றி
இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி என 13 இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் எலும்புமுறிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 5 சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். முகாமிற்கு அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகளின் குறைபாடு சதவீதம் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக தூத்துக்குடி மாநகராட்சியில்தான் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று கால்களை நனைத்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து அதனை வளர்;த்தால் சமூகத்தில் சிறந்த மாணவ, மாணவியாக வருவார்கள். அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் கெல்லர் என்ற மாற்றுத்திறனாளி தனிமனிதராக சக்கர நாற்காலியிலேயே 10 கி.மீ. தூரத்திற்கு சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும். சமூகம் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி சாதிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகளைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார்.
இவ்வாறு ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பேசினார்.
முகாமில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
