மதுரை- தூத்துக்குடி ரெயில்வே விரிவாக்க திட்டத்துக்கு அமைச்சகம் ஒப்புதல் தரவேண்டும்; சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்.

நாடாளுமன்றத்துக்கான ரெயில்வே நிலைக்குழுக்கூட்டம் இன்று மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு நிலை குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தென்னக ரெயில்வேயின் புதிய ரெயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரெயில் பாதை பணிகள், இரட்டை ரெயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா, கவுசலேந்திர குமார், ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கவுசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டார். அவர் நிலைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் பேசியதாவது:-
“மதுரை தூத்துக்குடிக்கான புதிய ரெயில்வே விரிவாக்கத்திட்டம் 2053 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு சமர்பிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ரெயில்வே அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும்.
வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில்; கன்னியாகுமரி- திருவனந்தபுரம் பிரிவுகளில் மின்சார மயத்துடன் கூடிய இரட்டைப்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். முதலில் 2022 ஆகஸ்ட் 15க்குள் இந்த திட்டங்கள் முடிவடையும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தது .ஆனால் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் இது மேலும் மூன்றாண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது.
இந்த இரட்டை பாதை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி விரைந்து போதிய நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை முடிக்க வேண்டும்.
கூடல் நகர் ரெயில் நிலையத்தை மதுரையில் இரண்டாவது முனையமாக தயார் செய்ய வேண்டும். அனைத்து ரெயில்களும் கூடல் நகரில் நின்று செல்ல வேண்டும். இதன் மூலம் மதுரை சந்திப்பின் நெருக்கடியை தீர்க்க வேண்டும்”
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி.பேசினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற செயலக இயக்குனர் மாயா லிங்கி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும் சி பி எம் மாநிலக்குழு உறுப்பினருமான பாலவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
