இளம்தலைமுறையினர் மூலம் நாடு வளர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டுவதில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முக்கிய பங்கு; ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் முன்னாள் ராணுவம் மற்றும் துணைப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் முன்னாள் ராணுவம் மற்றும் துணைப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ராணுவத்தில் ஒருவர் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஒழுக்கமுடையவர்களாக இருப்பார்கள் என்பது உண்மையாகும். எனவே ஒரு சமூகத்தில் உள்ள அனைவரும் ராணுவத்தில் இருந்தால் அந்த சமூகமும் ஒழுக்கமுடையதாக இருக்கும். பல்வேறு நாடுகளில் ராணுவத்தில் பணிபுரிவது கட்டமாயமாக உள்ளது. ராணுவம் ஒரு சிறந்த சமூகப்பொறுப்பாளியை உருவாக்குகிறது.
தமிழ்நாட்டிலேயே அதிகளவில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் உள்ள மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் ராணுவப்பட்டி என்ற கிராமமே உள்ளது. அந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார்கள். தென்தமிழகத்தில் அதிகளவில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் உள்ள மாவட்டம் தூத்துக்குடி ஆகும். குறிப்பாக வீரத்திற்கு பெயர் பெற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வாழ்ந்த கயத்தாறில் இந்த கட்டிடம் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராணுவ வீரர்களின் குடும்பத்தினை சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளுக்கு இந்த கட்டிடத்தினை பயன்படுத்த வேண்டும். இந்த சங்கம் மேலும் வளர வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெற வேண்டும். மேலும், உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.
ராணுவ வீரர்களின் சேவைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இளம்தலைமுறையினர் மூலம் நாடு வளர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டுவதில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி தலைவர் இரா.சுப்புலட்சுமி ராஜதுரை மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகள், ராணுவ வீரர்கள் விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
