ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார்.
அதன்படி, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) உள்ளனர்.
இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.
வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தோ்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதிலளிக்கையில்,”சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைபடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்றார்.
பலம் குறைந்தது
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.
