நாணயம்… (சிறுகதை)

தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டது அந்த தனியார் பஸ்.அன்று பஸ்சில் அதிக கூட்டம்..
கண்டக்டர் டிக்கெட் போடத்தயாரானார்.. லேடிஸ் முன்னே போங்க..லேடிஸ் முன்னே போங்க..என்று அவர் குரல் கொடுக்க…
பெண்கள் முணங்கியபடி இன்னும் எங்கே முன்னுக்குப்போறது..ஏற்கனவே கூட்டமா இருக்கு…இன்னும் ஆளை ஏத்தப்போறீயளா..சும்மாவே மூச்சுவிடமுடியல..என்றனர்.
கண்டக்டர் அதை கண்டுகொள்ளாமல் டிக்கெட்போடுவதிலே குறியாக இருந்தார்.
பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது நான்கு வாலிபர்கள் தாவி ஏறினார்கள். தலையை ஒரு சின்ன சீப்பால் சீவி மீண்டும் கலைத்துவிட்டுக்கொண்டார்கள். பஸ் புட்போர்டில் இரண்டுபேர் தொங்கியபடி வந்தனர்.
கண்டக்டர் பாட்டுபோடச்சொல்லு..என்று கத்தினார்கள்.கண்டக்டர் ம்..என்று மட்டும்தலையை ஆட்டினார்.பாட்டு போடச்சொல்லவில்லை.
ஆத்திரம் அடைந்த இளைஞர்கள்..பாட்டு போடுறீயா இல்லை கண்ணாடி இறங்கிரும் என்று எச்சரித்தனர்.
கண்டக்டர் டிரைவருக்கு சிக்கனல் கொடுக்க..பாடல் ஒலித்தது..அந்த பாடல் போடா..போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு..என்று ஒலிக்க இளைஞர்கள் தாளம்போட்டனர்.
சிறிது நேரத்தில் ஒருவன்..என்னபாட்டு இது..நல்லபாட்டா போடுயா என்று குரல் எழுப்பினான்.போடா..போடா புண்ணாக்கே ஓடியதால் எரிச்சலான அவன் பஸ்சை ஓங்கி தட்டினான்.என்ன நல்லபாட்டு போடமாட்டியா..காசு கொடுத்துதானே வர்ரோம்..நல்லபாட்டு போடு இல்லன்னா கண்ணாடி இறங்கிரும் என்று சொல்லி தலைமுடியை கோதிவிட்டான்.
கண்டக்டர் பல்லை கடித்துக்கொண்டு பதிவு சொல்லாமல் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வந்தார்…கூட்டநெரிசலில் பெண்கள் டிக்கெட் எடுக்கவே படாதபாடு பட்டார்கள்.ஒரு பெண் கோவில்பட்டிக்கு டிக்கெட் ரூ.45 க்கு இரண்டு இருபது ரூபாய் நோட்டும், ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் கொடுத்தார்.
கண்டக்டர் வாங்கும்போது ஐந்து ரூபாய் நாணயம் கைதவறி கீழே விழ அந்த பெண் விழிக்க கண்டக்டரோ..பரவாயில்லை..பஸ்சிலே கீழேதான கிடக்கும்..பிறகுபார்த்து எடுத்துக்கிறேன் என்று சொல்லி டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அடுத்து ஒரு முதியவர் குறுக்குசாலைக்கு இருபது ரூபாய் டிக்கெட் கேட்டு பதினைந்து ரூபாயை நீட்டினார்.
இன்னும் ஐந்து ரூபாயை எங்கே என்று கண்டக்டர் கேட்க..முதியவரோ..வேட்டியில முடிஞ்சுவச்சிருந்தேன்..எங்கோ விழுந்துட்டு..நாளைக்கு வரும்போது தர்ரேன் என்று இழுத்தார்.
ஏற்கனவே இளைஞர்கள் மீது கோபத்தில் இருந்த கண்டக்டர்..என்னய்யா ஏமாத்தப்பாக்கிறீங்களா…ஐந்து ரூபா இருந்தா எடு..இல்லன்னா கீழே இறங்கும் என்று அதட்டினார்.
முதியவர் விழித்தார்.
எத்தனை முறை நீங்க சில்லறை பாக்கி தராமா போயிருக்கீங்க..நாங்க கேட்டிருக்கமா என்று மடக்கினார்.
கோபம் அடைந்த கண்டக்டர் விசில் அடித்தார்.பஸ் நின்றது.ஐந்து ரூபா கொடுக்கமுடியாத முதியவரே இறங்குங்க…வேற பஸ்வரும் போங்க..என்று வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்.
சட்டம் பேசுறாரு சட்டம் என்று முணுமுணுத்தவர் அடுத்த டிக்கெட் கொடுக்க முயல..வாலிபரின் குரல் மீண்டும் ஒலித்தது.
போடா..போடா புண்ணாக்க பாடலை நிறுத்தப்போறீயா இல்லையா என்று எச்சரித்தான்.
கண்டக்டர் பதில் சொல்லவில்லை.ஆத்திரம் அடைந்த இளைஞன் கை ஆயுதமாக மாற கிளிங் என்று சத்தம் கேட்க கண்ணாடி சிதறியது.
அடுத்து எட்டயபுரத்தை பஸ் நிலையத்தை பஸ் அடைந்தபோது சுற்றிவளைத்த போலீஸ் பஸ்சில் கலாட்டா செய்த வாலிபர்களை கொத்தாக அள்ளிச்சென்றது.
அப்போது போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு என்றபாடல் அதிக சத்தத்துடன் ஒலித்தது.
எட்டயபுரத்தில் நிறையபேர் இறங்கினார்கள். பஸ் கொஞ்சம் பிரியாகியது.பஸ் மீண்டும் புறப்பட்டு கோவில்பட்டி சென்றது.
பஸ்சில் கண்டக்டரிடம் ஒரு பெண் கொடுக்கும்போது கீழே தவறிவிழுந்த ஐந்து ரூபாய் நாணயம் அந்தபெண்ணின் இருக்கையின் கீழே கிடந்தது பளிச்சென்று தெரிந்தது.
பின்பக்க இருக்கையில் இருந்த பெண் அந்த நாணயத்தை எடுத்து முன் சீட்டிலிருந்த பெண்ணிடம் கொடுத்து இது உங்கள் காசா என்று கேட்டார்.அவரும்..ஆமா ஆமா..என்காசுதான் என்று சொல்லி வாங்கிக்கொண்டார்.
கண்டக்டர் பலமுறை அந்த பெண்ணை தாண்டிப்போனார். ஆனால் கண்டக்டரிடம் அவர் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்ததாக தெரியவில்லை .கண்டக்டரோ..சில்லறைபாக்கி இருந்தா வாங்கிக்கிங்கோ…என்று கூவி கூவி அழைத்து பயணிகளுக்கு சில்லறைபாக்கியை கொடுத்தார்.
பஸ் கோவில்பட்டியை வந்தடைந்தது.அந்த பெண் ஹேண்ட்பேக்கை தோளில் தொங்கவிட்டபடி ஒய்யாரமாக பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.பஸ்சில் எல்லோரும் இறங்கியபின் பஸ்சுக்குள் தவறிவிழுந்த நாணயத்தை கண்டக்டர் தேடிக்கொண்டிருந்தார்…!
வே.தபசுக்குமார்- முள்ளன்விளை ,தூத்துக்குடி.
