கோவில் சொர்க்க வாசல் திறப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த புகைப்பட கலைஞர்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, தி இந்து ஆங்கில பத்திரிக்கை புகைப்பட கலைஞர் கே/வி. சீனிவாசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்த போது புகைப்பட கலைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணை செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே. வி. சீனிவாசன் (வயது 56), இன்று திங்கட்கிழமை (2.01.2023) அதிகாலை 4.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டிருந்த நம்முடைய நண்பரின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.திரு.கே.வி.சீனிவாசன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது .
மூத்த புகைப்பட கலைஞர் திரு.கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த நேரத்தில் நம்முடைய துயரத்தில் பங்கேற்று உடனடியாக இரங்கல் செய்தி வெலியிட்டதுடன் மறைந்த கே.வி. சீனிவாசன் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்ட தமிழக முதல்வரின் அக்கறையும் அன்பும் நம்மை நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
கே. வி. சீனிவாசன் இறுதி சடங்குகள் இன்று மாலை 5.மணியளவில் கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் நடைபெறுகிறது
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.