திண்டுக்கல்லில் பரபரப்பு: கழுத்து அறுபட்டு ஓடி வந்த வாலிபர் பஸ் நிலையத்தில் சுருண்டு விழுந்து சாவு
திண்டுக்கல் பஸ் நிலையம் நேற்று இரவு 9 மணி அளவில் பரபரப்புடன் இருந்த சமயத்தில் கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு வாலிபர் ஓடி வந்தார். இதை பார்த்த பயணிகள் பயந்துபோய் ஒதுங்கினர்.
நத்தம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்துக்கு வந்த அந்த வாலிபர் நடைமேடையில் சுருண்டு விழுந்து இறந்து போனார்.
இதுகுறித்து அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இறந்து போனவர் சித்தர்கள் நத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் மர்ம நபர்களுக்கும் அந்த இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் அஜித் குமாரின் கழுத்தை அறுத்தனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு ஓடி வந்த அஜித்குமார் நடைமேடையில் மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்து இருக்கிறது.
போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.