கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக பெண் டாக்டர், செவிலியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் நோயாளிகளிடம் மரியாதை க் குறைவாக பேசுவாக புகார் கூறியும் இந்த செயலை கண்டித்தும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.அன்புராஜ் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, மாநில செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, நகர செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இணை செயலாளர் செல்வேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
, தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் பணியாற்றும் பெண் மருத்துவர், செவிலியர் ஆகியோர் நோயாளிகளை அவதூறாக பேசியதாக கூறி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் வழங்கிய மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
நான் எனது உறவினருக்கு உடல் பரிசோதனை செய்ய இ.எஸ்.ஐ. மருந்தகத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர், செவிலியர் ஆகியோர் என்னிடமும், நோயாளிகளிடமும் மரியாதை குறைவாக பேசினர். இதுகுறித்து கேட்டபோது என்னிடம் வாக்குவாதம் செய்தனர். எங்களை அவதூறாக பேசினர்.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்துக்கு வரும் நோயாளிகளிடம் அவர்கள் மரியாதை குறைவாக நடப்பதாக குற்றம்சாட்டினர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.