என்னை திருமணம் செய்த நபர் சேடிஸ்ட்; கணவரை விவாகரத்து செய்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண்ணீர்

குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
அதற்கு முன் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். விஜயலட்சுமிக்கு கடந்த 2016ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பிறகு அந்த மணமகன் ஏராளமான நிபந்தனைகள் போடுவதாக கூறி அந்த திருமணமே வேண்டாம் என நிறுத்தினார்.
பின்னர் கடந்த 2018ல் இன்டீரியர் டெகரேடரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுமான அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது.
இவரது விவாகரத்து செய்தி அரசல் புரசலாக வெளியானதே தவிர அதற்கான காரணமும் எதுவும் தெரியவில்லை. அதுகுறித்து வைக்கம் விஜயலட்சுமியும் எதுவும் பேசவில்லை.
இந்நிலையில் பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் “மனிதி வா” என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை நடிகை கவுதமி நடத்தி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதில் தான் திருமணம் செய்து கொண்டபின் நடந்த நிகழ்வுகளையும் அவர் ஏன் மிமிக்ரி கலைஞர் மேரி அனுப்பை விவாகரத்து செய்தார் என்பதையும் கூறியிருந்தார். அவர் கூறியதாவது:-
என்னை திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார்.
அதையெல்லாம் விட எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்கு பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை” என்று கூறியுள்ளார்.
