• June 7, 2025

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தமிழக அரசு வழங்கிய கவுரவம்

 எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தமிழக அரசு வழங்கிய கவுரவம்

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.9.1922 அன்று கி.ராஜநாராயணன் பிறந்தார்.

பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன் பேச்சுத்தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும் வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன.

கி.ராஜநாராயணன்- கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்

1991 ஆம் ஆண்டு “ கோபல்லபுரத்து மக்கள் ” என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். கி.ராஜநாராயணன் இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்று இருக்கிறார்.

கோவில்பட்டியில் திறந்து வைக்கபட்ட கி.ராஜநாராயணன் சிலைக்கு அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளார்

தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்தார்.

தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் 18.5.2021 அன்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி. ராஜநாராயணன் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு 11.10.2022 அன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கோவில்பட்டியில் 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து இருக்கிறார்.

இவற்றின் மூலம் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தமிழக அரசு மிகப்பெரிய கவுரவத்தை வழங்கி இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *