கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம்; காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.1கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது,
மேலும் இங்குள்ள நூலகத்தில் கி.ரா.எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. மேலும் மற்ற எழுத்தாளர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளும் வைக்கப்படும்,
இது தவிர டிஜிட்டல் நூலகத்தில் கி.ரா எழுதிய நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கும். அவற்றை பொதுமக்கள் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கி.ராஜநாராயணன் மணி மண்டபம் திறப்பு விழா இன்று காலை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது,சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு உருவ சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலகத்தில் இருந்து அமைச்சர் சாமிநாதன், கனிமொழி எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறைசெயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) சண்முகம், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் இருந்து காணொளி காட்சி மூலமாக அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி தலைவர் .பிரம்மசக்தி ,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் .கஸ்தூரி ,கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பீக்கிலீபட்டி முருகேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .இம்மானுவேல் உட்பட கழக நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கி.ரா.குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
