சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் பற்றி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை- காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ஜெகதீசன் (65), என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி அவரது பைக் மற்றும் சாவியை பறித்தனர். மேலும் அங்கு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சசீருதின் (33) என்பவரையும் அடித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வம் மகள் யாசினி (எ) அபினேஷ் (19), காயல்பட்டிணத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகள் பென்னிலா (எ) செல்வகணபதி (25), தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சில்பா (எ) முத்துராஜ் (19) மற்றும் பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சக்திவேல் மகள் பாவனா (எ) சரவணகுமார் (21) ஆகிய திருநகங்கைகள் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் அவசர போலீஸ் தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
