• June 8, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் திடீர் ராஜினமா; கே.எஸ்.அழகிரி மீது கடும் குற்றச்சாட்டு

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் திடீர் ராஜினமா; கே.எஸ்.அழகிரி மீது  கடும் குற்றச்சாட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ், இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஆர்.காமராஜ் இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரசை பொருத்தவரை வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் நடந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சிக்காரர்களையே சில குண்டர்களால் காயங்கள் ஏற்படுத்தும் வகையில் தாக்கியுள்ள செயல் கண்டிக்கத்தக்கது.
மறுநாள் 16ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது என்று எங்களுக்கு அழைப்பு விடுத்து விட்டு மாநில தலைவர் அதில் கலந்து கொள்ளவில்லை. காரணம் கேட்டபோது ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கூட்டத்துக்கு வருவேன் எனக் கூறுகிறார்.

மாநிலத் தலைவரை சந்திக்கச் செல்லும் காங்கிரஸ்காரர்களை கண்டிப்பதோடு கன்னத்தில் அறையும் சில சூழல்களையும் நாம் காட்சியில் பார்த்திருக்கிறோம். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உண்மையிலேயே அங்கு ஆட்களுடன் சென்று தவறு செய்திருந்தால் அவர் மீதும் மாநில தலைவர் மீதும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த நிகழ்ச்சிக்கு தலைவரும், பொருளாளரும் மட்டுமே பொறுப்பு. அதில் ஒருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரியானது அல்ல.
தமிழகத்தில் மாநில தலைவருடன் உள்ள சில குறிப்பிட்ட நபர்கள் பணம் பெற்றுக் கொண்டு நிர்வாகிகளை மாற்றும் சூழல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேர் தற்போது உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட போதும் இங்குள்ள தமிழக முதல்வர் அவரை கட்டியணைத்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் பெரிய அளவில் பதில் அளிக்கவில்லை.
அதேபோல் இந்த 6 பேர் விடுதலையிலும், இதனைத் தவறு என்றோ, இதற்கு மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்றோ என தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. மாவட்டத் தலைவர் என்ற முறையில் இது குறித்து நான் பலமுறை கேட்டபோதும் சரியான பதில் இல்லை.
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தமிழக காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பணம் வசூல் செய்யும் ஒரு மோசமான சூழல் இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு வந்து பலரிடம் பொறுப்புகள் வாங்கித் தருவதாக கூறி கையூட்டு பெற்றுள்ளார். இவர் போன்றோர் மூலமாகத்தான் கே.எஸ். அழகிரிக்கு வசூல் வேட்டை நடந்து வருகிறது.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் காங்கிரஸ் அடிமட்டத்தில் எப்படி இருக்கிறது என்ற நிலையை தெரிந்து கொள்ளாமல் மேல்பட்டத்தில் விலை உயர்ந்த கார்களில் வருகை தந்து பணம் வைத்திருப்பவர்களை மட்டும் சந்தித்து விட்டு இந்த இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற மிகப்பெரிய சூழலில் தான் கே.எஸ்.அழகிரி உள்ளார். அவர் வட்டார மற்றும் நகர தலைவர்களை பார்ப்பது கிடையாது என்ற சூழல் தான் உள்ளது.

இவர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய 15 சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் காங்கிரஸ் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிமட்ட நிர்வாகிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே இந்தப் பதவியில் நான் நீடிக்க விரும்பவில்லை. தலைவரும் பொருளாளரும் செய்த தவறுக்கு பொருளாளர் மீது மட்டும் நடவடிக்கை என்ன நியாயம் என்பதை கேட்டு தான் நான் இந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என மாநிலத் தலைவருக்கு தபால் அனுப்பிவிட்டேன்.

இவ்வாறு ஆர்.காமராஜ் கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.திருப்பதி ராஜா மாவட்ட பொருளாளர் ஆர்.கார்த்தி காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *