தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இது வரை 238 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை-பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இது வரை குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை, மற்றும் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாவட்ட காவல்துறை
கண்காணிப்பார் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குண்டர் தடுப்புச் சட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 எதிரிகள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா வழக்குகள்: இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்து 256 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வழக்குகள் :இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 1060 வழக்குகள் பதிவு செய்து 1132 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 9034 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை வழக்குகள் : இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3493 வழக்குகள் பதிவு செய்து 3534 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7730 லிட்டர் மதுபானம் மற்றும் 86 போதை மாத்திரைகள் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
