இசை அமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்; மோடி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.
அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பலகலைக்கழக விழா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு பிரதமர், கவர்னர் முதல்-அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
விழாவில் மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:- தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன; இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு; இதனை மேலும் வலிமைப்படுத்த புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வி திட்டங்கள் உள்ளன,
காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களாக உள்ளன. வட இந்தியர் அனைவரும் தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி,மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண். யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி. அத்தகைய கல்வியை ஒன்றிய அரசு மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. எமர்சென்சியின் போது தான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் .
இவ்வாறு மு,க.ஸ்டாலின் பேசினார்.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்கினார், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், விழா நிறைவில் பிரதமர் மோடி பேசினார்.
