காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் வருகை: பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெறுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகலுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.
மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார் . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தார்,\
இதற்காக அம்பாத்துரையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு இருந்தது.
ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர், அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

வழி நெடுகிலும் சாலையின் இருபுறத்திலும் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர். காரின் பக்கவாட்டில் நின்றபடியே பயணம் செய்த பிரதமர் மோடி, கூட்டத்தினரை பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்துகொண்டார்.
\பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
