மதுரையில் இருந்து காந்தி கிராமத்துக்கு பிரதமர் மோடி காரில் பயணம்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் பயணம் தவிர்க்கப்பட்டு, சுமார் 60 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாக காரில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே, நாளை காலை முதல் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பா.ஜ.க. கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன. வழிநெடுகிலும், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் மக்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னை வந்தபோது, காரில் இருந்து இறங்கி மக்களை நோக்கி கைகாட்டியது போல, நாளையும் பிரதமர் மோடி, காந்திகிராமம் செல்லும் வழியில் மக்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் டிரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும், புகை வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி கிராம பலகலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
