தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பிரம்மசக்தி தேர்வு

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா, துணைத்தலைவராக செல்வக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும், துணைத்தலைவர் செல்வக்குமார் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் சில மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்ததையடுத்து அ.தி.மு.க. பலம் குறைந்தது.
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் தீர்வு கிடைக்கப்பெற்றது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் உறுப்பினர் பிரம்மசக்தி மனு அளித்திருந்தார்.
கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் வேறுயாரும் போட்டியிடாததால் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரம்மசக்திக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பிரம்மசக்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து சண்முகையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலெட்சுமி சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன் உள்பட பலர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
