கண்பார்வையற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ; திருநெல்வேலி உதவி ஆட்சியராக பதவி ஏற்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகன் எஸ்.கோகுல். இவர் 26 வயதான இவர் திருநெல்வேலி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதுகலைப்படிப்பில் எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ள கோகுல், கண்பார்வையற்றவர். 2021 ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக பதவி ஏற்று இருக்கிறார்.
ஆட்சியர் வே.விஷ்ணு ,முன்னிலையில் கோகுல் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற கோகுலுக்கு ஆட்சியர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்தவர் கோகுல். இவரது தந்தை சுரேஷ்குமார் தேசிய மாணவர் படை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் சோபாகுமாரி திருவனந்தபுரத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த நிலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பை தொடர்ந்துள்ளார் கோகுல்.
இந்நிலையில், இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் அகில இந்திய தரவரிசையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டுள்ளார்.
அவர் கல்லூரியில படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கையாளும் முறையை கோகுல் அறிந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் 804 ஆவது இடத்தைப் பெற்றார்
பிறவியிலேயே பார்வையற்றவரான கோகுல் இன்று ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும். படிப்புக்கும், வாழ்வில் முன்னேறுவதற்கும் பார்வையின்மையோ, உடல் குறைபாடோ ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் கோகுல். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
