கயத்தாறு ம.தி.மு.க. நிர்வாகி கொலைக்கான காரணம் என்ன? வாலிபரை பிடித்து விசாரணை

கோவில்பட்டி அருகே கயத்தாறு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற கோடாங்கி மாரி (வயது 52). விவசாயியான இவர் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளராகவும், ம.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும் இருந்தார்.
இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கொடாங்கிமாரி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். கொன்றனர்.
இது தொடர்பாக கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இடப்பிரச்சினை காரணமாக மாரியப்பன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாரியப்பன் கொலை தொடர்பாக கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்த காளிப்பாண்டி (வயது27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
