• June 7, 2025

ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன்-எந்த வித விசாரணையையும் சந்திக்க தயார்; சசிகலா அறிக்கை

 ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன்-எந்த வித விசாரணையையும் சந்திக்க தயார்; சசிகலா அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வி.கே. சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிதில்லை. என்றைக்கு நான் அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம்
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள், குறிப்பாக தி.மு.க.வினர், நம் அம்மா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது, இதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று.
என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கியதுதான் மிகவும் கொடுமையானது. அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள். அம்மாவின் மரணம் பற்றி எத்தனை முறை விசாரித்தாலும், அதன் உண்மை என்றைக்கும் மாறாது. அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் தான், துரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30.11.2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்தஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்னையும் அம்மாவையும் எப்படியாவது பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே அம்மாவும், நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன்.
2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது. இறந்துபோன அம்மா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான்.
என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்போலோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்திருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம்.
வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று அம்மா அவர்களுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நாள் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள், அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனி யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு அறிக்கையில் சசிகலா குறிப்பிட்டிருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *