கோவில்பட்டி கோட்டத்தில், இன்று மின்தடை ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம்.துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும், இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மின்தடை திடீர் என நேற்று மாலை ஒத்திவைக்கப்ட்டது. அதாவது இன்று டி.ஆர்.பி. தேர்வு இருப்பதாலும், பருவ மழை காரணமாகவும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கம் போல மின் வினியோகம் இருக்கும் என்று கோவில்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஒத்திவைப்பு காரணமாக இன்று தொழிற்சாலைகளில் வழக்கம்போல் பணிகள் நடந்தன. அலுவலகங்களில் ஜெனரேட்டர் போடக்கூடிய அவசியம் இல்லாமல் ஊழியர்கள் வேலை பார்த்தனர். மொத்தத்தில் மின்தடை ரத்து என்பது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகத்தான் இருந்தது.
மின்தடை அறிவிப்பு வெளியிடும் போது டி.ஆர்.பி.தேர்வு இருப்பது தெரியாதா? பருவமழை பெய்து வருவதும் மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது ஏனோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
