கோவில்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்ளாத அதிகாரிகள்; ஆட்சியர் ஆவேசம்

கோவில்பட்டியை அடுத்துள்ள ஆவல்நத்தம் சமுதாய நலக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்,
முன்கூட்டியே முகாம நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் முகாம் நடந்தபோது குறிப்பிட்ட துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்கள் மட்டுமே கூடி இருந்தனர்.
இதை கண்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆவேசம் அடைந்தார். அவர் டி.எஸ்.பி.எங்கே? இன்ஸ்பெக்டர் எங்கே? சுகாதார துறையில் இருந்து யார் வந்து இருக்காங்க? இவங்க எல்லாம் உடனே வரணும் என்று ஆவேசத்துடன் கூறினார். இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் குறிபிட்ட அதிகாரிகள் அலறியடித்துகொண்டு அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் மக்களிடம் குறைகள் கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் மக்களிடம் இருந்து 130 மனுக்கள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முகாம் முடிந்ததும் அருகில் உள்ள பள்ளிக்கூட வளாகத்துக்கு சென்றார். அங்கு குழாய் உடைந்த நிலையில் பயன்படாத குடிநீர் தொட்டியை கண்டார். அதை கண்டு மேலும் கோபம் அடைந்த அவர் அதிகாரிகளை பார்த்து மக்களுக்கு பயன்படனும் இல்ல்லேன்னா காய்லான் கடையில் போட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கவேண்டியது தானே என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் சக்திநகர், நாரணபுரம், பகுதிகளுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் சென்றார். அங்கு குடிநீர் குழாய்களில் கலங்கலாக தண்ணீர் வருவதாக பெண்கள் புகார் அளித்தனர், அதை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.
முகாமில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் துறை அதிகாரிகள்கலந்து கொண்டனர்,
முகாம் முடிந்து ஆட்சியர் செந்தில்ராஜ் திரும்பும் போது, மூப்பன்பட்டி காலனி அருகே சாலையில் லிங்கம்பட்டி கிராம மக்கள், மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக தலைவர் அன்புராஜ் தலைமையில் அமர்ந்திருந்தனர்.
காரில் இருந்து இறங்கிய ஆட்சியர் செந்தில்ராஜ்,, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றார். அந்த மனுவில், “லிங்கம்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பட்டா வழங்க கோரி, கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், உதவி கலெக்டர், தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருந்தனர்.
அதற்கு பதில் அளித்த ஆட்சியர் , விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
