தூத்துக்குடி 3 ம் கேட் ரெயில்வே மேம்பாலம் திறப்பு; மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 3 ம் கேட் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்ய சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக பாலம் மூடப்பட்டு போக்குவரத்து, 4வது ரயில்வே கேட் மற்றும் 2ம் கேட் வழியாக மாற்றி விடப்பட்டது. பிரதான சாலை மூடப்பட்டதால் நகரில் பல பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியில் தவித்தன. நீண்ட தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 12 நாட்கள் நடைபெற்று வந்த சீரமைக்கும் பணிகள், மேயர் ஜெகன் பெரியசாமியின் தீவிர முயற்சியால் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. நேற்று பகலிலேயே திறந்து விடப்படும் என்று மேயர் அறிவித்திருந்தார்.ஆனால் முந்தைய நாள் மழை பெய்துவிட்டதால் அது நடக்கவில்லை, தாமதமானது.

இதற்கிடையே கலெக்டர் செந்தில்ராஜ், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் அடுத்தடுத்து மேம்பாலம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவில் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் மழை காரணமாக சற்று தாமதமாகி, இன்று அதிகாலையில் மேம்பாலம் திறந்துவிடப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கம் போல் வாகனங்கள் பயணிக்க தொடங்கின. வாகன் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
