மாணவன் தற்கொலை: போக்சோ சட்டத்தில் ஆசிரியை கைது

சென்னை அம்பத்தூர் வைகை தெருவை சேர்ந்த 17 வயது மாணவர் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் சென்னை, மாநில கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.
அதன் பிறகு கிருஷ்ணகுமார் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்சொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணகுமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பிறகு,உறவினர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
பின்னர் தகவல் அறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகார் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் மாணவர் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.
அப்பொழுது மாணவருக்கும் ஆசிரியர் சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விட்டனர். இதனால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார்.
இதை தொடர்ந்து மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவிடம் பேசமுயன்றார். எனினும் ஆசிரியை காதலை தொடர மறுத்ததால் விரக்தியில் மாணவன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
அவரது மொபைலை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து ஆசிரியை சர்மிளா நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
