தீபாவளி: தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள்-அமைச்சர் சிவசங்கர்

தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.
சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு நடைபெறும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151 என்ற டோல் பிரீ எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் தொலைபேசியிலும் 044-24749002, 044-26280445,044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்”
மாதவரத்தில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதிக்கு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப் பட உள்ளது.
சென்னையிலிருந்து தினசரி 2,100 பஸ்களுடன் 4,218 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
